தெரிந்துகொள்ள வேண்டிய ஜான்சி ராணியின் வீரம் – மணிகர்னிகா விமர்சனம்

நடிகர் ஜிசு செங்குப்தா
நடிகை கங்கனா ரனாவத்
இயக்குனர் ராதா கிருஷ்ணா ஜாகர்லமூடி
இசை ஷங்கர் எக்சான் லாய்
ஓளிப்பதிவு கிரண் டோகன்ஸ், ஞானசேகர்
கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவில் நுழைந்து ஆதிக்கம் செலுத்தி வந்த காலம், அவர்களது பார்வை இந்தியாவின் செல்வத்தின் மீதிருந்தது. இந்தியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், ஜான்சியையும் கைப்பற்ற நினைத்தார்கள்.

மணிகர்னிகாவின் வீரத்தை பார்த்த ஜான்சியின் முக்கிய நிர்வாகிகள் ஜான்சியின் ராஜாவான கங்கதர் ராவ்வுக்கு மணிகர்னிகாவை திருமணம் செய்து வைக்கிறார்கள். இந்த நிலையில், ஜான்சிக்கு வருகை தரும் கிழக்கு இந்திய கம்பெனியை சேர்ந்தவர்களுக்கு அரசர் உட்பட அரசவையில் இருக்கும் அனைவரும் தலைவணங்க, ஜான்சியின் ராணியான மணிகர்னிகா, தான் யாருக்கும் தலைவணங்க மாட்டேன் என்று வீராப்புடன் நிற்கிறார். தனக்கு தலைவணங்காத மணிகர்னிகாவை பழிவாங்குவதாக ஆங்கிலேயர்கள் சபதமிட்டு செல்கிறார்கள்.

ஜான்சியின் ராணியாகும் மணிகர்னிகாவுக்கு ஒரு குழந்தை பிறந்து சில காலங்கில் இறந்து விடுகிறது. இந்த நிலையில், ஜான்சியின் மன்னரும் நோய்வாய்ப்பட, சிறுவன் ஒருவனை அடுத்த ராஜாவாக தத்து எடுக்கிறார்கள்.

பின்னர், ஜான்சியின் அரசர் கங்கதர் ராவ் மறைவால், அரியணைக்கு சொந்தமான சிறுவன், வளரும் வரை ஜான்சியை ராணி மணிகர்ணிகா ஆட்சி செய்கிறார். இந்த நேரத்தில் ஆங்கிலேயர்கள் ஜான்சி மீது போர் தொடுக்கிறார்கள். போரை கண்டு அஞ்சாத ராணி மணிகர்னிகா ஆங்கிலேயர்களை தனது பராக்கிரமங்கள் மூலம் எப்படி எதிர்கொண்டார்? ஜான்சியை காப்பாற்றினாரா? என்ற வீரமங்கையின் வரலாறு தான் இந்த கதை.

கங்கனா மணிகர்னிகா ராணியாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். துறுதுறுவென இருக்கும் இளம் பருவம், யாருக்கும் அஞ்சாத குணம், போர் புரியும் வீரம் என அனைத்திலும் ஜான்சியின் ராணியை கண்முன் நிறுத்துகிறார். நடிப்பு மட்டுமின்றி இயக்குநராகவும் இந்த படத்தில் அறிமுகமாகியிருக்கும் கங்கனா, தனது வேலையை செவ்வென செய்துவிட்டு சென்றிருக்கிறார். இயக்குநர் கங்கனாவுக்கு வாழ்த்துக்கள்.

அதுல் குல்கர்னி, ஜிசு செங்குப்தா, சுரேஷ் ஓபராய், டேனி டென்சோங்பா, வைபவ் டட்லவாடி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஜான்சி ராணியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் கதை என்பதால், படம் முழுக்க கங்கனாவே ஆக்கிரமித்துள்ளார். ராஜாவின் மறைவுக்கு பின்னர், ஆங்கிலேயர்களை எதிர்க்க மக்களை தயார்படுத்துவது, மக்களின் தேசப்பற்றை ஊக்குவிப்பது என கங்கனாவின் கதாபாத்திரம் விரிகிறது. படத்தின் முதல் பாதியில் மணிகர்னிகாவின் இளம்வயது, திருமண வாழ்க்கையை விவரித்திருக்கும் நிலையில், இரண்டாவது பாதியில் போர் பயிற்சி, தேசப்பற்று என கதை நகர்ந்து படத்தின் இறுதியில் போருடன் முடிவடையும்படியாக படத்தை இயக்கியிருக்கிறார்கள் ராதா கிருஷ்ணா ஜாகர்லமூடி, கங்கனா ரணாவத். வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம்.

படத்திற்கு ஷங்கர் எக்சான் லாய் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். சஞ்சித் பல்ஹாரா, அங்கித் பல்ஹாரா பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. கிரண் டோகன்ஸ், ஞானசேகரின் ஒளிப்பதிவு பிரம்மாண்டத்தை அப்பட்டமாக காட்டியிருக்கிறது.

மொத்தத்தில் `மணிகர்னிகா’ வீரம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.