நான் குடிக்கவே இல்லை.. இது பொய் வதந்தி.. காயத்ரி ரகுராம் விளக்கம்..!


பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் படத்தின் மூலம் நடிகையானவர் காயத்ரி ரகுராம். மறைந்த நடன இயக்குநர் ரகுராமின் மகளான காயத்ரி தற்போது தமிழ் திரைப்படவுலகில் முன்னணி நடன இயக்குநராக உள்ளார்.

இந்நிலையில் சென்னை திரு.வி.க. பாலம் பகுதியில் அபிராமபுரம் போலீசார் நேற்று முன் தினம் இரவு நடத்திய வாகன சோதனையில் காயத்ரி ரகுராம் மது போதையில் கார் ஓட்டிவந்ததாகவும், இதையடுத்து போலீசார் காயத்ரி ரகுராம் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்ததாகவும் இணையதளங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில் தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ள காயத்ரி ரகுராம், இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் விளக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் கூறுகையில்,

“எதையோ மறைக்க நான் செய்தியாக்கப்பட்டுள்ளேன். பேனாவும் பத்திரிகையும் பலமானதாக இருக்கலாம். ஆனால், எனது ஆன்மாவை விட, வாழ்க்கையை விட எதுவும் வலுவானது இல்லை. என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள். நான் துணிச்சலுடன் வாழ்வேன். இந்த பொய் செய்தியை உருவாக்கிய நிருபர்தான் போதையில் இருந்திருக்க வேண்டும்.


நான் எனது படப்பிடிப்பை முடித்த பின்னர், என்னுடன் பணி புரியும் சக நடிகரை வீட்டில் இறக்கி விட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கமான வாகன சோதனைக்காக என்னை நிறுத்தினார்கள். அங்கே வாக்குவாதமோ தர்க்கமோ எதுவும் நடக்கவில்லை. அந்த நிருபர் அவர் மனதில் தோன்றியதை எல்லாம் எழுதியிருக்கிறார்.

எனது லைசன்ஸ் மற்ற ஆவணங்கள் வேறொரு பையில் இருந்ததால் அவற்றை அப்போது போலீசாரிடம் காண்பிக்க முடியவில்லை. அவர்கள் பணியை நான் பாராட்டினேன். அங்கே எனது ரசிகர் ஒருவர் என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். நானேதான் எனது காரை ஓட்டிச் சென்றேன். ஒருவேளை நான் போதையில் இருந்திருந்தால் என்னை எப்படி காரை ஓட்டிச் செல்ல அனுமதித்திருப்பார்கள்.

10 நிமிடங்கள்தான் நான் அங்கு இருந்திருப்பேன்.என்னைப் பற்றி எந்த செய்தி வந்தாலும் எனக்கு கவலை இல்லை. போதையில் இருந்த அந்த நிருபரை விட்டுவிட்டு எல்லோரும் என்னை குறி வைக்கின்றனர்.

தனிப்பட்ட சுதந்திரம் என்பதே இங்கு இல்லை. இருந்தாலும் வேறு முக்கியமான விஷயங்கள் நிறைய உள்ளன. நான் அதை கவனிக்கிறேன். கடவுள் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!