காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்..!! சர்ச்சையில் பிரபல நடிகையின் மகன்..!!!


சென்னை திருமங்கலத்தில் காதலிக்க மறுத்ததால் தனியார் மருத்துவ கல்லூரி மாணவியின் வீட்டில் புகுந்து கொலை மிரட்டல் விடுத்த நடிகை ‘பூனைக்கண்’ புவனேஸ்வரியின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த 23 வயதான இளம் பெண் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் பேஸ் புக்கில் அறிமுகமான மிதுன் சீனிவாசன் என்ற பொறியியல் கல்லூரி மாணவனுடன் அப்பெண் நட்பாக பழகி வந்துள்ளார்.


இந்த நிலையில் தன்னுடன் பழகி வரும் மிதுன் நடிகை புவனேஸ்வரியின் மகன் என்பது மாணவிக்கு தெரிய வந்துள்ளது.

மேலும் மிதுன் மீது இலங்கையை சேர்ந்த இளம் பெண்ணை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக வழக்கு இருப்பதையும் அந்த பெண் அறிந்துள்ளார்.

இதனை தொடர்ந்து மிதுன் சீனிவாசனுடனான பழக்கத்தை மாணவி முறித்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்ட மிதுன் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி தொந்தரவு செய்துள்ளார்.


அதனை ஏற்க மாணவி மறுத்ததால், அவரது வீட்டிற்கு சென்ற மிதுன் தன்னை காதலிக்கவில்லை என்றால் நுங்கம்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட ஸ்வாதி நிலை ஏற்படும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவேன் என்றும் மிரட்டினாராம். இதனால் அச்சமடைந்த மாணவியின் பெற்றோர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து மருத்துவ மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுனை போலீசார் கைது செய்தனர்.


சென்னை ஆதம்பாக்கத்தில் காதலிக்க மறுத்த இளம்பெண் இந்துஜா எரிக்கப்பட்டு உயிரிழந்தார். அதே போன்ற கொடூரக் குற்றம் மீண்டும் தொடராமல் இருக்க நடிகை புவனேஸ்வரியின் மகனை போலீசார் உடனடியாக கைது செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையை சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் எனது 23 வயது மகள் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வந்தார். மிதுன் சீனிவாசன் என்பவரும், எனது மகளும் காதல் திருமணம் செய்து கொண்டதாக தெரியவந்தது.

நடிகை புவனேஸ்வரியின் கட்டுப்பாட்டில் இருந்த எனது மகளை மீட்டு கடந்த ஆகஸ்டு மாதம் என்னிடம் திருச்சி போலீசார் ஒப்படைத்தனர்.


அப்போது, முகநூல் மூலம் பழக்கமான மிதுன் சீனிவாசனின் பேச்சியில் மயங்கி தான் சென்னை சென்றதாகவும், அங்கு தன்னை போதைக்கு அடிமையாக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் என் மகள் தெரிவித்தார். ஆகஸ்டு 17ம் தேதி என் மகளை மீண்டும் காணவில்லை.

இது தொடர்பாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடிகை புவனேஸ்வரியின் பிடியில் என் மகள் இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. என் மகளை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் மகள் நேரில் ஆஜராகி தனக்கும், மிதுன் சீனிவாசனுக்கும் திருமணம் ஆகிவிட்டதாக தெரிவித்தார்.


இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது பெண்ணை மிரட்டிய வழக்கு மிதுன் மீது பாய்ந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#