அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை கையாடல்..!! பாக்யராஜ் புகாருக்கு இயக்குநர் விசு விளக்கம்..!!


தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் அறக்கட்டளை என்ற அமைப்பை ஆரம்பித்து ரூ.37 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது என்றும், முன்னாள் தலைவரும் திரைப்பட இயக்குனருமான விசு, முன்னாள் செயலாளர் பிறைசூடன், அறங்காவலர் மதுமிதா ஆகியோர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜ் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதற்கு பதில் அளித்து இயக்குனர் விசு கூறியதாவது,

‘‘ எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறேன். இயக்குனர் பாக்யராஜ் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்குச் சென்று என் மீது பண மோசடி புகார் அளித்து இருப்பது அதிர்ச்சியாக உள்ளது.


அறக்கட்டளையில் எந்த மோசடியும் நடக்கவில்லை. பணம் கையாடல் செய்யப்படவும் இல்லை.

அந்த பணம் வங்கியில் பத்திரமாக இருக்கிறது. அதில் வரும் வட்டியில் நலிந்த எழுத்தாளர்களுக்கு உதவிகள் செய்யப்படுகின்றன. பாக்யராஜ் என்மீது போலீசில் புகார் அளித்ததன் மூலம் மனிதாபிமானம் செத்துப்போய் விட்டதாக நினைக்கிறேன். ஆண்டவன் கருணையால் உடல்நலம் தேறி திரும்பி வருவேன். அப்போது இந்த மோசடி புகாரை எதிர்த்து நிற்பேன்.

நான் நாணயத்தோடு பிறந்தவன். நிறைய பேருக்கு கல்வி உதவிகள் வழங்கி வருகிறேன். நேர்மையாக வருமான வரி கட்டுகிறேன். சங்க அறக்கட்டளையில் இருந்து ஒரு பைசா கூட எடுத்தது இல்லை. ’’

இவ்வாறு விசு கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!