தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர் சரத்குமார். பல படங்களின் நடித்து வெற்றி பெற்றவர், இன்றும் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடம் வைத்து இருக்கிறார். 1996ம் ஆண்டு தி.மு.கவில் தன்னை இணைத்து கொண்டார். 2002ல் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவில் இணைந்து மனைவி ராதிகாவுடன் அக்கட்சிக்காக தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து, அதிமுகவில் இருந்தும் விலகியவர். 2007ல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். தற்போது பரபரப்பாக அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
சரத்குமார் முதல் மனைவியின் மகள் வரலட்சுமி தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். நாயகிக்கான சரியான வாய்ப்பு அவருக்கு இன்னும் ஏற்படவில்லை என்றாலும் முக்கிய கதாபாத்திரமாக நடித்து வெற்றி பெற்றவர். தொடர்ந்து, சமூக பணிகளிலும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
சினிமாத்துறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தவிர்க்க சேவ் சக்தி என்ற அமைப்பை நடத்தி வருகிறார். சமூகத்தில் பாலியல் பிரச்சனைக்கு எதிராக தனது கருத்தை தொடர்ந்து பதிவு செய்து வருபவர். சமீபத்தில் தான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என கூறி இருந்தார்.
இந்நிலையில், வரலட்சுமி பாஜகவில் இணைந்து விட்டதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. பாஜக கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இந்தியா முழுக்க இருக்கும் பிரபலங்களை சென்று நேரில் சந்தித்து பேசி வருகிறார். அதன்படி, வரலட்சுமியை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருவதாக வரலட்சுமி தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து, ”முரளிதரவுடன் நடந்த சந்திப்பில் பாஜக இந்தியாவில் பெண்கள் பாதுகாப்புக்காக செய்ய இருக்கும் மாற்றங்கள் குறித்து பேசினோம். எங்கள் தரப்பு கருத்துக்களையும் மோடி கேட்க இருப்பதாக அவர் தெரிவித்தார். பாஜகவில் நான் சேர்ந்ததாக கூறுவது முழுக்க முழுக்க வதந்தி. நான் எந்த கட்சியிலும் இல்லை.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!