இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் காளி. இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். இப்படம் 13-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்தநிலையில், இந்த படத்தை வெளியிட தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வில்லியம் அலெக்சாண்டர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:-
விஜய் ஆண்டனி நடித்த அண்ணாத்துரை படத்தை வாங்கி, வெளியிட்டதில், எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து, காளி படத்தை குறைந்த விலைக்கு எனக்கு தருவதாக விஜய் ஆண்டனியும், காளி படத்தை தயாரிக்கும் அவரது மனைவி பாத்திமாவும் உத்தரவாதம் அளித்தனர். நானும் ரூ.50 லட்சம் முன்தொகை கொடுத்து, அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன்.
இடைக்கால தடை
தற்போது திரையுலக வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதனால், புதிய படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால், என்னால் பாக்கித் தொகையை கொடுக்க முடியவில்லை. இதையடுத்து காளி படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய போவதாக விஜய் ஆண்டனி எனக்கு நோட்டீசு அனுப்பியுள்ளார். எனவே, காளி படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘காளிப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கிறேன். அதேநேரம், எதிர்மனுதாரர்கள் பாத்திமா, விஜய் ஆண்டனி ஆகியோர் ரூ.4.75 கோடியை 11-ந் தேதிக்குள் இந்த ஐகோர்ட்டில் டெபாசிட் செய்தால், திட்டமிட்டப்படி வருகிற 13-ந் தேதி படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி