‘இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை’ – கமல்ஹாசன்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் இன்று மாலை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவில் இதுவரை எந்த நாட்டின் விண்கலமும் தரையிறங்காத பகுதியில் இந்திய விண்கலம் தரையிறங்கி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், அறிவியலாளர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“செயற்கைக்கோள் பாகங்களை சைக்கிளில் சுமந்து செல்வது முதல் நிலவில் இறங்குவது வரை – என்ன ஒரு பயணம்! இஸ்ரோ நமது தேசத்தின் பெருமை. இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு வரலாற்று நாள். இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!