விரைவில் உருவாகும் பீட்சா -4.. தயாரிப்பாளர் அதிரடி அறிவிப்பு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் பீட்சா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து மங்காத்தா, மேகா, ஜீரோ, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்த அஸ்வின் நடிப்பில் பீட்சா 3 திரைப்படம் உருவானது. இப்படத்தை இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கினார். இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.

இதில் காளி வெங்கட், பவித்ரா, கவுரவ் நாராயணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘பீட்சா’ திரைப்பட வரிசையில் நான்காம் பாகம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தயாரிப்பாளர் சி.வி. குமார் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “பீட்சா மூன்று பாகங்களின் வெற்றி, இப்படத்தின் மீது ரசிகர்கள் வைத்துள்ள அபிமானத்தையும் தரமான உள்ளடக்கத்தை என்றுமே அவர்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் தொடர்ந்து அளித்து வருகிறது. எனவே அவர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ‘பீட்சா’ நான்காம் பாகம் விரைவில் தொடங்கும். இதன் இயக்குனர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று கூறினார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!