சூர்யாவுக்கு வில்லனாக பாபி தியோல்

தமிழ் சினிமாவில் இந்தி நடிகர்கள் வில்லன் வேடத்தில் நடித்து மிரட்டியிருக்கிறார்கள். ‘தளபதி’ படத்தில் அம்ரிஷ்புரி, ‘2.0’ படத்தில் அக்ஷய்குமார், ‘காலா’வ் படத்தில் நானா படேகர், ‘விக்ரம்’ படத்தில் அம்ஜத்கான் என இந்தி நடிகர்கள் கலக்கியிருக்கிறார்கள்.

கே.ஜி.எப்.-2′ படத்தில் கொடூர வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த சஞ்சய் தத், தற்போது விஜய்க்கு வில்லனாக ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் மேலும் ஒரு இந்தி நடிகர், தமிழ் படத்தில் வில்லனாக நடிக்கிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தில் பிரபல இந்தி நடிகர் பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறுகையில், “கங்குவா படத்தில் சூர்யாவுக்கு இணையாக ஆளுமைமிக்க வில்லனாக மிரட்டக்கூடிய நடிகரை தேடினோம். அப்படி சிந்திக்கும்போது பாபி தியோல் அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று நம்பினோம். கதையை சொன்னதும் அவரும் உடனடியாக ஒப்புக்கொண்டார்” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, இதுவரை பார்க்காத பாபி தியோலை ரசிகர்கள் பார்ப்பது நிச்சயம். அவரது உடல்மொழியிலும், தோற்றத்திலும் ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவம் காத்திருக்கிறது. ஆகஸ்டு மாதம் பாங்காக்கில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் இணைகிறார்” என்றார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!