தவறான பழக்கத்தால் சாவின் விளிம்பிற்கே சென்று விட்டேன்- ரோபோ சங்கர் உருக்கம்

தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

சமீபகாலமாக அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ரோபோ சங்கர் குறித்து பல வதந்திகள் பரவி வந்தன.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் உடல் எடை குறைந்தது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், “என் உடம்பை நான் குறைத்ததற்கு காரணம் சினிமாவிற்காக தான், அதுமட்டுமல்லாமல் எனக்கு இடையில் மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது. ஐந்து மாதங்கள் படுத்த படுக்கையில் இருந்தேன் சாவின் விளிம்பிற்கே சென்று விட்டேன். அதற்கு காரணம் என்னிடம் இருந்த சில கெட்ட பழக்கங்கள். நான் அந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன்.

தற்போது உங்களுக்கு நான் பெரிய உதாரணமாக இருக்கிறேன். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்யும் நிலைக்கு சென்றுவிட்டேன். கடந்த ஜனவரி மாதம் எனக்கு வாழ்க்கையை வெறுத்து அந்த பழக்க வழக்கம் இல்லாமல் இருக்க முடியாத நிலையில் இருந்தேன். நடு இரவில் பைத்தியம் போன்று வீட்டில் திரிந்தேன்.

அந்த நேரம் மருத்துவர்களை சந்தித்ததன் மூலம் என் உடம்பில் இருந்த மஞ்சள் காமாலை மற்றும் கெட்ட பழக்கங்களால் எந்த பகுதிகள் எல்லாம் சேதம் ஆகியுள்ளன என்பதை எல்லாம் பார்த்து மருத்துவரின் ஆலோசனையை கேட்டு எல்லா பழக்கத்தையும் விட்டேன். இரவு பகலாக என் குடும்பம் தான் என்னை முழுவதும் கவனித்து கொண்டார்கள். எத்தனையோ நண்பர்களின் பிரார்த்தனைகளால் தான் நான் இங்கு நிற்கிறேன்” என்று கூறினார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!