பட விழாவுக்கு வர பணம் கேட்டேனா? நடிகர் விமல் விளக்கம்

சரவண சக்தி இயக்கத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ள குலசாமி பட விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் விமல் பங்கேற்கவில்லை. விழாவுக்கு வர விமல் தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு கொடுக்காததால் புறக்கணித்து விட்டதாக தகவல் பரவியது. விழாவில் பங்கேற்ற டைரக்டர் அமீரும் விமல் வராததை கண்டித்து பேசினார். இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கு விமல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “குலசாமி படத்தை விளம்பரம் செய்யும் விழாவுக்கு வர நான் பணம் கேட்டேன் என்று சொல்வது தவறான தகவல். டைரக்டர் அமீரை தொடர்பு கொண்டு இதனை விளக்கி விட்டேன்.

அன்றைய தினம் தெய்வமச்சான் பட நிகழ்ச்சி இருந்தது. அதற்கான தேதியை அந்த படக்குழுவினர் ஒரு மாதத்துக்கு முன்பே என்னிடம் சொல்லி விட்டனர். ஆனால் குலசாமி பட விழா நிகழ்ச்சி பற்றி நான்கு நாட்களுக்கு முன்புதான் என்னிடம் சொன்னார்கள். இரண்டையும் ஒரே தேதியில் வைத்துவிட்டனர். அதனால்தான் வர முடியவில்லை. வரமுடியாத காரணத்தை இயக்குனரிடமும் சொல்லி விட்டேன்” என்றார்.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!