சார்பட்டா 2 கதைக்களம் இதுவா? பா.இரஞ்சித் சொன்ன சுவாரஸ்ய தகவல்

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

1960- களில் வடசென்னையில் உள்ள இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு குழுக்களுக்கும் இடையிலான மோதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் அந்த பகுதியில் உள்ள குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் அதில் உள்ள அரசியலையும் காட்டியிருந்தனர்.

மேலும், சார்பட்டா பரம்பரை பட காட்சிகளை வைத்து பல மீம்களும், வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரலானது. சில தினங்களுக்கு முன்பு ‘சார்பட்டா பரம்பரை’ இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பா.இரஞ்சித் இயக்கும் இப்படத்தை நாட்ஸ் ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்ஷன்ஸ், தி ஷோ பீபுள் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி சார்பட்டா பரம்பரை முதல் பாகத்தின் முன் பகுதியாக (PreQuel) இரண்டாம் பாகம் வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னதாக பா.இரஞ்சித் தனியார் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், 1925-களில் நடந்த பென்னி மில் கலவரம் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கிய கதையை எழுதி முடித்ததாக தெரிவித்திருந்தார்.

இதனை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து சார்பட்டா பரம்பரை 2, இந்த கதைகளத்தை மைய்யப்படுத்தி அமையும் என்று நெட்டிசன்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!