மூத்த நடிகர்களை அவமதித்ததாக எதிர்ப்பு: மன்னிப்பு கேட்ட பாலகிருஷ்ணா

என்.டி.ராமராவின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான பாலகிருஷ்ணா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த வீரசிம்மா ரெட்டி படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசும்போது மறைந்த பழம்பெரும் நடிகர்களான எஸ்.வி.ரங்காராவை, அந்த ரங்காராவ் இந்த ரங்காராவ் என்றும் அக்கினேனி நாகேஸ்வரராவை அக்கினேனி தொக்கினேனி என்றும் பேசியது சர்ச்சையை கிளப்பியது.

நாகேஸ்வரராவின் பேரன்களான நடிகர்கள் நாக சைதன்யா, அகில் ஆகியோர் பாலகிருஷ்ணா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். எஸ்.வி.ரங்காராவ் பற்றி இழிவாக பேசியதற்காக பாலகிருஷ்ணா வீட்டு முன்னால் முற்றுகையிடுவோம் என்று சில அமைப்புகள் அறிவித்தன. இதையடுத்து தனது பேச்சுக்கு பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்டுள்ளார்.

அவர் கூறும்போது, “நான் நாகேஸ்வரராவ், எஸ்.வி.ரங்காராவ் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நாகேஸ்வரராவை என் சித்தப்பா போலவே பார்த்தேன். அவர் மகன்களை விட என்னிடம்தான் மிகவும் அன்பாக இருப்பார். அது வாய் தவறி வந்த வார்த்தைகளே தவிர அவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. யாரையாவது புண்படுத்தும்படி என் பேச்சு இருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!