பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து நான் நடிப்பதில்லை- பூஜா ஹெக்டே பதிலடி

தமிழில் ‘முகமூடி’ படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வந்த சில படங்கள் வருமான ரீதியாக சரிவை சந்தித்தது. ஆனாலும் சம்பளம் விஷயத்தில் கறாராக இருப்பதாக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. சம்பளத்தோடு சிகை மற்றும் உடை அலங்கார நிபுணர், பாதுகாவலர்கள் என்று தன்னுடன் வரும் 15 முதல் 20 பேருக்கு ஆகும் செலவை தயாரிப்பாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதாகவும் கூறப்பட்டது.

இதனால் வருத்தமான பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில், “கதை வலுவாக இருந்தாலும் நான் கேட்ட சம்பளம் தராவிட்டால் அந்த படத்தில் நான் நடிக்காமல் புறக்கணிக்கிறேன் என்று பரவி உள்ள தகவலில் உண்மை இல்லை. பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து நான் நடிக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் இவ்வளவு தூரம் வந்து இருக்க மாட்டேன். இப்போது உள்ள போட்டி உலகில் வந்த வாய்ப்புகளை பயன்படுத்துவது புத்திசாலித்தனம். நல்ல படங்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியமும் நடிகைகளுக்கு உள்ளது. சம்பளத்தை முக்கியமாக கருதி கிடைத்த கதைகளில் எல்லாம் நடித்தாலும் காணாமல் போய்விடுவோம்” என்றார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!