எனது கணவர் ஒரு சேடிஸ்ட்.. கண்கலங்கிய வைக்கம் விஜயலட்சுமி..

பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஏராளமான பாடல்களைப் பாடி வருகிறார். ராஜூ முருகன் இயக்கத்தில் வெளிவந்த குக்கூ படத்தில் ‘கோடையிலும் மழை போல’ என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

இமான் இசையில் இவர் பாடிய ‘சொப்பன சுந்தரி நான் தானே’ என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் இவரை அறிமுகம் செய்து வைத்தது. அபார குரல் ஞானத்தில் எல்லோரையும் வியக்க வைத்தார் விஜயலட்சுமி. ஆனாலும் அவர் பார்வை திறன் குன்றிய மாற்றுத்திறனாளியாக இருந்தார். 2016-ல் பெற்றோர் இவருக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சிகள் எடுத்தனர்.

அப்போது கிடைத்த மாப்பிள்ளை பல கட்டுப்பாடுகளை விதித்ததால் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார் விஜய லட்சுமி. அதன் பிறகு 2018-ல் அனூப் என்ற பல குரல் கலைஞர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில் வைக்கம் விஜயலட்சுமி அளித்துள்ள பேட்டியில் தன் முன்னாள் கணவர் குறித்துப் பேசியிருப்பது அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அவர் கூறியதாவது, “எனது கணவர் ஒரு சேடிஸ்ட் என்பது போகப் போகத்தான் எனக்குத் தெரிய வந்தது. அவர் எப்பவுமே என்னுடைய குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டி வந்தார். அதையே அவர் முழுநேர பணியாகவும் வைத்திருந்தார்.

திருமணத்துக்குப் பின் எனது பெற்றோரை என்னிடமிருந்து பிரித்தார். அதையெல்லாம் விட என்னைப் பாட்டு பாட கூடாது எனக்கூறி பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். மிகவும் சித்ரவதை செய்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. பாடல்கள் தான் எனக்கு உயிர். அவருக்காக என் சந்தோஷத்தைத் தொலைத்து விட்டு, பாடல்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நான் வாழ விரும்பவில்லை.

பொதுவாகப் பல்வலி வந்தால் முதலில் அதைப் பொறுத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். அதுவே ஒரு கட்டத்திற்கு மேல் அதிகமானால் அந்த பல்லை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை. அதனால் தான் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டேன்” எனக் கண் கலங்கியபடி கூறியுள்ளார்.





  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!