32 ஆண்டுகளுக்கு பிறகு சல்மான் கானுடன் இணையும் ரேவதி

1983-ஆ ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரேவதி. அதன்பின் கை கொடுக்கும் கை, புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், பகல் நிலவு, மௌன ராகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து 80 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மேலும் மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார். ரேவதி சில படங்களையும் இயக்கியுள்ளார்.

தற்போது இந்தியில் ‘சலாம் வெங்கி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கஜோல், விஷால் மற்றும் ஜெத்வா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சல்மான்கான் நடத்தும் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட ரேவதி, 32 வருடங்களுக்குப் பிறகு சல்மான்கானுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மணீஷ் சர்மா இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் ‘டைகர் 3’ படம் உருவாகிறது. இப்படத்தில் கதாநாயகியாக கத்ரீனா கைஃப் நடிக்கவுள்ளார். மேலும் ஷாருக்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ரேவதி நடிக்கவிருக்கும் கதாப்பாத்திரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!