இரட்டை குழந்தை விவகாரத்தில் நயன்- விக்கி விதிகள் மீறி இருப்பது உறுதி

நயன்தாரா-விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 4 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனிடையே காதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது, “நயன்தாரா விவகாரத்தில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறோம். அந்த குழு விசாரித்து கொண்டிருக்கிறார்கள். முழு அறிக்கை கிடைக்கபெற்ற பின்னர் எந்த மாதிரியான விதிமீறல் நடைபெற்றிருக்கிறது. விதிமீறலின் தன்மை சட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா? என்று முழுவிவரமும் அறிவிக்கப்படும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் ஓரிரு நாளில் அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாடகைதாய் விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று சுகாதாரத்துறை விசாரணை நடத்தவுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறி இருப்பது அம்பலமாகியுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றால் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று திபாவளியன்று இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!