கேமரா முன் நடித்தால் போதும்.. நிஜ வாழ்க்கையில் தேவை இல்லை- ரகுல்பிரீத் சங்

தமிழில் தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரகுல்பிரீத் சிங் தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்திலும் நடிக்கிறார். ரகுல்பிரீத் சிங் சமீபத்தில் இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து அவரை காதலிப்பதாக பகிரங்கப்படுத்தினார்.

தற்போது காதல் உறவு குறித்து ரகுல்பிரீத் சிங் அளித்துள்ள பேட்டியில், ”சிலர் தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக பேசாமல் இருப்பது ஒருவித மனநிலை. ஆனால் நான் அப்படி இல்லை. காதலை வெளிப்படுத்தினேன். எனது வாழ்க்கையை இரட்டை வழியில் கொண்டு செல்ல விரும்பவில்லை. கேமரா முன் நடிக்கும்போது நிஜவாழ்க்கையில் நடிக்க தேவை இல்லை. நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன்.

எல்லோருக்கும் வாழ்க்கையில் துணை முக்கியம். நானும், ஜாக்கியும் எங்கள் உறவில் இயல்பாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கிறோம். இது பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதிலும் ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம். வாழ்க்கை மிகவும் எளிமையானது. பயத்தின் காரணமாக சில விஷயங்களை மறைத்து சிக்கலாக்குகின்றனர். எனக்கு பயம் இல்லாததால் காதலை மறைக்கவில்லை” என்றார்.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!