இது போன்ற மரியாதை ஒய்.எஸ்.ஆரின் அளவை உயர்த்தாது.. ஜூனியர் என்.டி.ஆர். ஆதங்கம்..

1986- ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமராவால் என்.டி.ஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இதற்கு தனது தந்தையான மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பெயரை சூட்டியுள்ளார் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி. மேலும், எம்.பி.பி.எஸ்., மருத்துவரான அவரது தந்தை அம்மாநில முதல்வராக இருந்து சுகாதாரம் தொடர்பான திட்டங்களைத் தொடங்கி, 3 புதிய மருத்துவக் கல்லூரிகளை அம்மாநிலத்தில் நிறுவியவர் என்று கூறி அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதற்கு ஜூனியர் என்.டி.ஆர். சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “என்.டி.ஆர் மற்றும் ஒய்.எஸ்.ஆர். இருவரும் மிகவும் பிரபலமான தலைவர்கள். ஒருவரின் பெயரை எடுத்துக்கொண்டு மற்றொருவரின் பெயரைச் சூட்டிக்கொண்டு வரும் இதுபோன்ற மரியாதை ஒய்.எஸ்.ஆரின் அளவை உயர்த்தாது, அது என்டிஆரின் அளவைக் குறைக்காது. பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதன் மூலம், என்டிஆர் சம்பாதித்த புகழையும், தெலுங்கு தேச வரலாற்றில் அவரது அந்தஸ்தையும், தெலுங்கு மக்களின் இதயங்களில் அவரது நினைவையும் அழிக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜெகன் மோகன் ரெட்டி, “ஆரோக்யஸ்ரீ மற்றும் 104 மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் போன்ற திட்டங்கள் மூலம் பொது சுகாதாரத்திற்காக தனது தந்தை என்ன செய்துள்ளார் என்பதற்கு இது ஒரு அங்கீகாரம் என்றும், என்டிஆரை சிறுமைப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும்” அவர் கூறியுள்ளார்.





  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!