நான்தான் விலகி இருக்கிறேன் அரசியல் என்னை விட்டு விலகவில்லை.. சிரஞ்சீவியின் பதிவால் ரசிகர்கள் குழப்பம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி, தற்போது மோகன் ராஜா இயக்கியுள்ள லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட் ஃபாதர் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சிரஞ்சீவி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு ஆடியோ பதிவு பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், ‘நான் அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால், அரசியல் என்னை விட்டு விலகவில்லை’ என்று பேசி உள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கி 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் போட்டியிட்டு சிரஞ்சீவி உள்பட 18 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். சில வருடங்கள் அரசியலில் இருந்த பிறகு கட்சியை கலைத்து காங்கிரசில் இணைத்துக் கொண்டார்.

பின்னர் ராஜ்யசபா எம்பியாக சிரஞ்சீவி தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு அரசியலை விட்டு விலகி இருந்த சிரஞ்சீவி மீண்டும் சினிமாவுக்கு வந்தார். இருப்பினும், அரசியல்வாதிகளுடன் நல்லுறவு வைத்துள்ள அவர் அரசியல்வாதிகள் பங்கேற்கும் சில கூட்டங்களில் பங்கேற்று வந்தார்.

மேலும், தனது தம்பி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியை மறைமுகமாக ஆதரித்து வருகிறார். இந்நிலையில், சிரஞ்சீவியின் இந்த ஆடியோ பதிவு தற்போது வைரலாகி பலரையும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தும் சிலர் இவர் நடித்துள்ள காட் ஃபாதர் படத்தின் வசனமாக இருக்கலாம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!