பிரித்விராஜ் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்

‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்’ படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்’, தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கும் படம் ‘கோல்டு’. பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, அனிமேஷன், ஸ்டன்ட் என அனைத்தையும் அல்போன்ஸ் புத்திரன் செய்து முடித்துள்ளார். இந்நிலையில், இப்படம் வருகிற செப்டம் 8-ஆம் தேதி ஓணம் பண்டிகை அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு வாரத்திற்கு பிறகு ‘கோல்டு’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் தரப்பில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ‘கோல்டு’ திரைப்படம் ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரம் கழித்து வெளியாகிறது. தாமதத்திற்கு எங்களை மன்னியுங்கள். படம் வெளியான பின்பு இந்த தாமதம் எங்கள் வேலையின் மூலம் ஈடுசெய்யப்படும் என்று நம்புகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!