பாக்கியராஜ் மீது ஒழுங்கு நடவடிக்கை? நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் நோட்டீஸ்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்த இயக்குனர் பாக்யராஜுக்கு, நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் தாங்கள் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தை பற்றியும், தேர்தல் குறித்தும் பொய்யான, உண்மைக்கு புறம்பான கருத்துகளை நடிகர் சங்கத்தினுடைய உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருகிறீர்கள்.

காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், சில உறுப்பினர்களின் தூண்டுதலின் பேரிலும் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீது சமூக அந்தஸ்தை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த செயலை செய்துள்ளீர்கள். சங்க சட்டவிதிகளுக்கு முரணாக இதை செய்து இருக்கிறீர்கள். சங்க உறுப்பினர்கள் சிலர் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து சங்கத்தின் செயற்குழுவில் விவாதித்து தங்களை சங்க உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்று விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் உங்களை சங்கத்தில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு இந்த கடிதம் அனுப்பப்படுகிறது. 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்காத பட்சத்தில் அல்லது தங்கள் விளக்கம் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!