இளையராஜா இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்கவே முடியாது – பா.இரஞ்சித்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. இப்படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது. ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’ கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்துக்கு இரண்டாம் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் பற்றி இயக்குனர் பா.இரஞ்சித் பேசியதாவது , “நட்சத்திரம் நகர்கிறது” காதல் படம் அல்ல காதலைப்பற்றிய படம். ஆணும் பெண்ணும் சந்திக்கும் பொழுது காதலாகத்தான் ஆரம்பமாகுது. அது குடும்பத்துக்கு தெரியும் பொழுதுதான் சமூகத்தின் பிரச்சினையாக மாறுகிறது. இங்கே காதலுக்கு ஒரு மதிப்பீடு இருக்கு. காதல் வர்க்கத்தையும் ஜாதியையும் பின்னிபிணைந்ததாக இருக்கிறது. காதல் பெர்சனலாக இருக்கும்பொழுது எந்த பிரச்சினையும் இல்லை.

இப்போ காதலை ஒரு பொலிட்டிக்கல் டெர்ம் ஆக மாற்றி வச்சிருக்காங்க. அதை பற்றி விவாதிக்கிற படம்தான் நட்சத்திரம் நகர்கிறது. இதில் ஆண் பெண் காதல்கள் மட்டும் இல்லாது ஒரு பாலின காதலைப் பற்றியும், திருநங்கையின் காதலைப் பற்றியும் பேசுகிறோம். பாண்டிச்சேரியில் நாடக தியேட்டரில் நடிக்கக்கூடுகிற நடிகர்கள் அவர்களின் எமோஷ்னல், காதலை விவரிக்கிறது இந்தப்படம். ஒரு காதலை குடும்பமும் சமூகமும் எப்படிப்பார்க்கிறது என இந்த படம் முழுக்க பேசுகிறோம். நவீன சினிமாவின் தாக்கத்தில் எழுதியிருக்கிறேன் படம் நல்லா வந்திருக்கு.

இசைஞானி இளையராஜாவுடன் இணைவீர்களா? என்கிற கேள்விக்கு, எனக்கு ரொம்ப பிடித்தவர்களை தூர நின்று பார்ப்பேன். இசைஞானியோடு இணைந்து வேலை செய்ய முடியும்னு இன்றுவரை நான் நினைத்ததில்லை. அவர் கிட்ட நெருங்கவே தயக்கம் இருக்கு. அவர் பெரிய மேதை. இசைஞானி இளையராஜா இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்கவே முடியாது. எனக்கு வழிகாட்டிய என் முன்னத்தி ஏரை நம்பித்தான் எங்கள் வீட்டில் என்னை சினிமாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர் பாடல்கள் எனக்கு சினிமா பாடல்கள்களாய் இல்லாமல் தன்னம்பிக்கை பாடல்களாக இருந்திருக்கிறது. ராஜாவை தினம் தினம் ரசிப்பவன் நான் என்றார்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!