நடிகை மீனாவின் கணவர் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட விஜயகாந்த்

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார். அவருக்கு வயது 48. மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக ‘தெறி’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.


அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபுதேவா, சுந்தர்.சி, நாசர், நடிகை சினேகா உள்ளிட்ட பலர் நேரில் சென்று வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


இந்நிலையில் நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மீனாவின் கணவர் மறைவு குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நடிகை மீனாவின் கணவர் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சேதுபதி ஐபிஎஸ், வானத்தை போல, பெரியண்ணா, உளவுத்துறை, மரியாதை, தேவன் உள்ளிட்ட பல படங்களில் நடிகை மீனா என்னுடன் சேர்ந்து நடித்துள்ளார். மீனாவின் கணவர் திடீர் மரணம் என்னை மட்டுமல்ல ஓட்டு மொத்த திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. வேதனையின் விளிம்பில் இருக்கும் நடிகை மீனாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மாசாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று விஜயகாந்த் பதிவிட்டுள்ளார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!