“வாழையடி வாழையென வளருமடா தமிழ்க்கூட்டம்” – வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியராக வலம் வரும் வைரமுத்துவின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் இவர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்கள் எழுதி அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம் பிடித்தார். இவர் இதுவரை 7500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார்.


கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழாற்றுப்படை என்ற புத்தகத்தை கவிஞர் வைரமுத்து வெளியிட்டார். தமிழின் மூவாயிர ஆண்டுகால பெருமைகளைக் கூறி தமிழை நோக்கி கேட்பவர்களை, வாசிப்பவர்களை ஆற்றுப்படுத்தும் என்கிற நம்பிக்கையால் வைரமுத்து எழுதி வெளியிட்ட இந்தப் புத்தகம் அனைவரின் பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் புத்தகத்தை படித்த ரஜினிகாந்த், வைரமுத்து குறித்து புகழ்ந்திருந்தார்.  


இந்நிலையில் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை புத்தகத்தை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகன் மாவீரன் இந்த புத்தகத்தை படிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது குறித்து வைரமுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். 


அதில், 


“காளிமுத்து பேரன்
செந்தமிழன் சீமானின்
திருச்செல்வன் மாவீரன்
தமிழாற்றுப்படையோடு
உறவாடி விளையாடும்
ஒளிப்படங்கள் கண்டேன்


நாளையொரு பூமலர
நல்லதமிழ்த் தேன்சிதற
வாழையடி வாழையென
வளருமடா தமிழ்க்கூட்டம்
என்று வாய்விட்டுச்
சொல்லிக்கொண்டேன்


தமிழாற்றுப்படையோடும் 
தமிழர் படையோடும்
வா மகனே” 


என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!