பாடும்போதே மேடையில் உயிரிழந்த பாடகர்.. ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எடவா பஷீர் மேடையில் பாடி கொண்டிருந்தபோது மரணம் அடைந்துள்ளார்.

கேரளாவின் ஆலப்புழாவில் இசை குழு ஒன்றின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எடவா பஷீர் கலந்து கொண்டு மேடையில் பாடி கொண்டிருந்தபோது, திடீரென சரிந்து விழுந்து மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 78. கேரளாவின் வர்கலை பகுதியருகே எடவா என்ற இடத்தில் பிறந்தவர் பஷீர். ஜேசுதாஸ் மற்றும் ரபி ஆகியோரின் பாடல்களை கேட்டு தொடக்க காலத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.

பள்ளி, கல்லூரியில் பல பரிசுகளை வென்றுள்ள பஷீர், பின் தனது நண்பர்களுடன் இணைந்து அனைத்து கேரள இசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் தலைவராகவும் செயல்பட்டார். அவர் பல கானமேளா இசை கச்சேரியிலும் பாடியுள்ளார். 

திரை துறையில், கே.ஜே.ஜாய் இசையமைப்பில் ரகு வம்சம் என்ற படத்தில் அறிமுகம் ஆகி, வீண வாயிக்கும் என்ற பாடலை பாடினார். பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடன் சேர்ந்து அவர் பாடிய முக்குவனே சினேகிச்ச பூதம் என்ற படத்தில் இடம் பெற்ற, ஆழித்திர மலகள் அழகின்டே மலகள் என்ற பாடல் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தது.

பஷீருக்கு ரஷீடா மற்றும் ரெஹ்னா என்ற இரு மனைவிகளும், உல்லாஸ், உமேஷ், உஷுஸ் சீட்டா, பீமா ஆகிய மகன்கள், மகள்களும் உள்ளனர். அவரது மறைவு செய்தி அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நம்ப முடியவில்லை. வருத்தம் ஏற்படுகிறது என்றும், அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் வேதனை தெரிவித்து உள்ளனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!