விஜய்பாபு விவகாரம் – நடிகர் சங்கத்தில் இருந்து நடிகை திடீர் விலகல்

நடிகை பாலியல் புகாரில் தலைமறைவான விஜய்பாபு விவகாரத்தில், நடிகர் சங்கத்தில் இருந்து நடிகை திடீர் என்று விலகியுள்ளார்.

மலையாள திரைப்பட உலகில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த விஜய்பாபு மீது ஒரு நடிகை பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக விஜய்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் விஜய்பாபு மீது மேலும் சில பெண்கள் பாலியல் புகார்களை கூறி வருகின்றனர்.


இந்த சூழலில் மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து விஜய்பாபுவை நீக்க வேண்டும் என பலரும் போர்க்கொடி தூக்கினர். இதனைத் தொடர்ந்து தானே சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகப்போவதாக நடிகர் விஜய்பாபு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தன் மீதான புகார்கள் அனைத்தும் வேண்டுமென்றே கூறப்பட்டிருப்பதாகவும் அதில் இருந்து மீண்டு வருவேன் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் விஜய்பாபு மீது நடவடிக்கை எடுக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்து, சங்கத்தின் பொறுப்பில் இருந்து விலகுவதாக நடிகை மாலாபார்வதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பாலியல் புகாரில் சிக்கியுள்ள விஜய்பாபு, பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி உள்ளது சட்டத்தை மீறிய செயலாகும். அவர் மீது நடவடிக்கை எடுக்க அம்மா சங்க விசாரணைக்குழுவில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனை கண்டித்து மலையாள நடிகர் சங்கத்தின் புகார்கள் விசாரணைக் குழுவில் இருந்து விலகியுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!