நில மோசடி வழக்கு.. கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சூரி ஆஜர்

ரூ.2.70 கோடி நில மோசடி வழக்கில் பணத்தை இழந்த காமெடி நடிகர் சூரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2-வது முறையாக நேரில் ஆஜரானார்.

பிரபல காமெடி நடிகர் சூரி சென்னை அடையாறு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார். சென்னையை அடுத்த சிறுசேரியில், நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.2.70 கோடி பண மோசடி செய்து விட்டதாக முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ்கொடவாலா, சினிமா தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோர் மீது அந்த புகார் மனுவில் குற்றம் சாட்டி இருந்தார்.


முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் கொடவாலா, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ஆவார். ரமேஷ்கொடவாலா தன் மீதான புகாரை மறுத்தார். இந்த நிலையில் இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நடிகர் சூரியின் புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா, உதவி கமிஷனர் ஜான்விக்டர் ஆகியோர் நேரடியாக விசாரித்து வருகிறார்கள்.

நடிகர் சூரியிடம் கடந்த மாதம் துணை கமிஷனர் மீனா, உதவி கமிஷனர் ஜான்விக்டர் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். நேற்று முன்தினம் நடிகர் சூரியிடம் 2-வது முறையாக விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் 100 கேள்விகள் கேட்டு அதிரடி விசாரணை நடந்தது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்று போலீசார், சூரியிடம் தெரிவித்து உள்ளனர்.


நடிகர் சூரிக்கு நிலம் வாங்கி தருவதாக சொன்ன குறிப்பிட்ட நிலம் உள்ள சிறுசேரி பகுதிக்கும் நேரில் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதே போல புகார் கூறப்பட்ட, முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ்கொடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோரிடமும் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!