நடிகை பலாத்கார வழக்கில் இரண்டாவது மனைவி ஆஜர்

நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொடர்புள்ளதாக நடிகர் திலீப்பின் 2-வது மனைவி நாளை ஆஜராகவுள்ளார்.


கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

 இந்த வழக்கு தொடர்பாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். விடுதலையான பின்னர் அவர் சாட்சிகளை கலைத்ததாக புகார் எழுந்தது.


இதுபோல சில முக்கிய ஆதாரங்களை அழித்ததாகவும், விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

 இதுதொடர்பாக நடிகர் திலீப்பிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். மேலும் அவரது செல்போன்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் சில தகவல்கள் அழிக்கப் பட்டிருந்தது.


அவற்றை சைபர் கிரைம் போலீசார் துணையுடன் மீண்டும் மீட்டெடுத்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் நடிகர் திலீப்பின் 2-வது மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நடிகை காவ்யா மாதவனையும் விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக அவரை நேற்று ஆலுவா போலீஸ் கிளப்பில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதற்கு நடிகை காவ்யா மாதவன், தான் வெளி நாட்டில் இருந்து நேற்று தான் சென்னை வந்ததாகவும், அங்கிருந்து கொச்சி வந்த பிறகு விசாரணைக்கு ஆஜராவதாகவும் கூறியிருந்தார். நேற்று அவர் சென்னையில் இருந்து கொச்சி திரும்பினார்.


கொச்சியில், தன் வீட்டில் வைத்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று காவ்யா மாதவன் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். இதை ஏற்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
 நாளை அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அதற்கு தயாராக இருக்கும்படியும் அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்த விசாரணை ஆலுவாவில் உள்ள போலீஸ் கிளப் அலுவலகத்தில் வைத்து நாளை பகல் 2.30 மணிக்கு நடக்கும் என்று கூறப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!