‘சூரரைப்போற்று’ படத்துக்காக சூர்யாவுக்கு ஆஸ்கார் விருது வழங்கி இருக்க வேண்டும் – நடிகர் சுதீப் புகழாரம்

‘சூரரைப்போற்று’ படத்தில் சூர்யா பிழை இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததாக கன்னட நடிகர் சுதீப் பாராட்டி உள்ளார்.

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நான் ஈ, புலி போன்ற படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கன்னட நடிகர் கிச்சா சுதீப், சமீபத்திய பேட்டியில் சூர்யாவின் நடிப்பை வெகுவாக பாராட்டி பேசி உள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: “சூரரை போற்று படத்தை ஓ.டி.டி.யில் பார்த்தேன். நிஜமாக சொல்ல வேண்டும் என்றால் சூர்யாவுக்கு ஆஸ்கார் விருது வழங்கி இருக்க வேண்டும். ஆஸ்கார் விருதுக்கு சூர்யா தகுதியானவர். அந்த படத்தில் பிழை இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஒரு படத்தை பார்ப்பதும் கதையாக படிப்பதும் வெவ்வேறானது. இந்த படம் கதாநாயகனை கொண்டாடும் படம் இல்லை. இதில் நடிக்க அவர் முன்வந்ததற்கு பெரிய துணிச்சல் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!