தயது செய்து இனிமேல் இப்படி செய்யாதீங்க – ரசிகரிடம் நடிகை ராஷ்மிகா வேண்டுகோள்

நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா, சமீபத்தில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். விரைவில் இந்தியிலும் அறிமுகமாக உள்ளார். இவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் திரிபாதி என்ற ரசிகர், ராஷ்மிகாவின் சொந்த ஊருக்குச் சென்று அவரை நேரில் சந்திக்க முடிவு செய்து, சுமார் 900 கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளார். இருப்பினும் அவரால் ராஷ்மிகாவின் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. பல்வேறு இடங்களில், அவரது வீட்டு விலாசம் கேட்டு விசாரித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த சிலர், இது குறித்து போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆகாஷிடம் விசாரணை நடத்திய போலீசார், குடகு மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு அறிவுரை கூறி தெலங்கானாவுக்கு திருப்பி அனுப்பினர்.

மும்பையில் படப்பிடிப்பில் இருந்த நடிகை ராஷ்மிகாவுக்கு இதுகுறித்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது ரசிகரிடம், ‘டுவிட்டர்’ வாயிலாக வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “என்னை காண்பதற்காக வெகு தூரம் பயணித்து எனது வீட்டிற்கு சென்றிருக்கிறீர்கள். தயது செய்து இனி இது போல் செய்ய வேண்டாம்.

உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. இருப்பினும் ஒரு நாள் உங்களை நேரில் சந்திப்பேன் என நம்புகிறேன். அதுவரை உங்கள் இடத்தில் இருந்தே அன்பு செலுத்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்று ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!