மோகன் ராஜா படத்தை கைவிடுகிறார் சிரஞ்சீவி?

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற லூசிபர் படத்தின், தெலுங்கு ரீமேக்கை சிரஞ்சீவி கைவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இப்படத்தை பார்த்த தெலுங்கு நடிகர் ராம்சரண், தன் தந்தை சிரஞ்சீவிக்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்கும் என கருதி, அதன் தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றினார்.

தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், தனி ஒருவன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான மோகன்ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்க ஒப்பந்தமானார். இப்படத்திற்கு கடந்த ஜனவரி மாதமே பூஜை போடப்பட்ட நிலையிலும், படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.

ஏனெனில், கதையில் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்யச் சொல்லியிருந்தாராம் சிரஞ்சீவி. ஆனால் மோகன்ராஜா செய்த மாற்றங்கள் சிரஞ்சீவியை திருப்திபடுத்தவில்லையாம். இதனால் நடிகர் சிரஞ்சீவி இப்படத்தை கைவிடும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. சிரஞ்சீவியின் இந்த முடிவால் படத்தின் ரீமேக் உரிமையை வேறு தயாரிப்பாளருக்கு விற்க ராம்சரண் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!