போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் அஜாஸ் கானுக்கு கொரோனா பாதிப்பு

நடிகர் அஜாஸ் கானிடம் விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில், சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி, அவரது தம்பி சோவிக் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணை மற்றும் சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது.

அவ்வகையில் பாலிவுட் நடிகர் அஜாஸ் கான் கடந்த மாத இறுதியில் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தானில் இருந்து மும்பை திரும்பிய அவரிடம், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தி கைது செய்தனர்.

அந்தேரி மற்றும் லோகண்ட்வாலா பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது, அஜாஸ் கான் வீட்டில் இருந்து போதை மாத்திரைகள் கிடைத்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஷாதாப் பாரூக் ஷாயிக் என்ற போதைப்பொருள் வியாபாரியுடன் அஜாஸ் கான் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அஜாஸ் கானிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அஜாஸ் கானுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்ததையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், அவரிடம் விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இத்தகவலை போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!