நடிகர் அல்லு சிரீஷுக்கு பாலிவுட்டில் கிடைத்த அங்கீகாரம்

நடிகரும், பொழுதுபோக்கு கலைஞருமான அல்லு சிரீஷ், மக்களை கவரும் வகையில் புதுபுது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ராதா மோகன் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான கவுரவம் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அல்லு சிரீஷ். நடிகரும், பொழுதுபோக்கு கலைஞருமான இவர் மக்களை கவரும் வகையில் புதுபுது முயற்சிகளை மேற்கொள்ள தயங்கியதில்லை. தென்னிந்திய விருது விழாக்களான ஐஃபா, பிலிம்பேர் மற்றும் சைமா உள்ளிட்ட பல விருது விழாக்களை தொகுத்து வழங்கியுள்ள இவர், தனது நகைச்சுவை உணர்வின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

நடிகர் அல்லு சிரீஷ், திரைப்படங்களைத் தவிர, உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். மேலும் இணையத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, அவர்களின் ஆதரவை பெற்று ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். டிக்டாக்கில் இணைந்த முதல் நடிகரும் இவர் தான், மேலும் அதில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டிருந்தார்.

தற்போது பாலிவுட்டில் மிகவும் பிரபலமான தர்ஷன் ராவல் மற்றும் நீதி மோகன் ஆகியோர் பாடிய, ‘விலாயதி ஷரப்’ என்ற இந்தி மியூசிக் வீடியோவில் நடித்துள்ளார். இதன்மூலம், இந்தி மியூசிக் வீடியோவில் நடித்த முதல் தென்னிந்திய நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளார் அல்லு சிரீஷ்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!