அது போலி கணக்கு… யாரும் ஏமாற வேண்டாம் – நடிகைகளுக்கு நயன்தாரா பட இயக்குனர் எச்சரிக்கை

தனது பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்து இயக்குனர் அஸ்வின் சரவணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் அஸ்வின் சரவணன் ஏற்கனவே நயன்தாரா நடித்த பேய் படமான மாயா, டாப்சி நடித்த கேம் ஓவர் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். 2018-ல் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘இறவாக்காலம்’ படத்தை இயக்கினார். இந்தப் படம் பண பிரச்சினையால் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், தனது பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்து அஸ்வின் சரவணன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலி ஐடி உருவாக்கி, ஆள்மாறாட்டம் செய்து, பல பெண்களிடம் புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி எண்களை கேட்டு வருகின்றனர். அதில் யாரும் ஏமாற வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

அத்துடன் போலி கணக்கின் ஸ்கிரீன் ஷாட்டையும் இணைத்துள்ளார். அந்த கணக்கில் இருந்து ஒருவர் பெண்களிடம் நான் அதர்வாவை வைத்து படம் இயக்குகிறேன். விருப்பம் இருந்தால் உங்களை எனது படத்தில் நாயகி ஆக்குகிறேன்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!