ஓட்டல் அறையில் சினிமா உதவி இயக்குனர் தூக்குபோட்டு தற்கொலை

சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ராகுல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழா ஆழியாடு பாலப்பரம்பு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி ரவீந்திரன். இவரது மகன் ராகுல்(வயது34). கேரளாவில் சினிமா உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்தார். பல்வேறு மலையாள திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ராகுல், தற்போது நடிகர் பிரத்விராஜ் நடிக்கும் ஒரு படத்தில் பணிபுரிந்து வந்தார். அதற்காக கடந்த மாதம் 21-ந் தேதி முதல் கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் தங்கி இருந்த அறை வெகு நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள், ராகுல் தங்கியிருந்த அறையை பார்த்தனர். அப்போது அறையின் மின்விசிறியில் ராகுல் பிணமாக தொங்கினார். இதுகுறித்து கொச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உதவி இயக்குனர் ராகுல் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் எதற்காக தற்கொலை செய்தார்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!