ரஜினிக்காக ‘அண்ணாத்த’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு

ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

சிவா – ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. கடந்த மார்ச் மாதம் வரை இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது. இதையடுத்து கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் கடந்த 9 மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது. இதனிடையே கடந்த டிசம்பர் 14-ம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் கடந்த வாரம் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர்.

இந்நிலையில், ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி மாதம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், ரஜினியின் உடல்நலனை கருத்தில் கொண்டு, எஞ்சியுள்ள படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த உள்ளார்களாம். இதுவரை 75 சதவீத படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!