அச்சுஅசல் சித்ராவை போல இருக்கும் இளம்பெண்…. வைரலாகும் போட்டோஷூட்

தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவை போன்று தோற்றமுடைய பெண்ணின் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டது ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் மற்றும் ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே சித்ராவை போன்றே தோற்றம் கொண்ட பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் பெயர் கீர்த்தனா தினகர்.

சித்ரா போலவே போட்டோ ஷூட் நடத்தியதன் பின்னணி குறித்து கீர்த்தனா தினகர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது: “இத்தனை வருடங்களாக, நான் எங்குச் சென்றாலும், என்னைப் பார்ப்பவர்கள் முதலில் சொல்வது, நீங்கள் சித்து/முல்லை/சின்ன பாப்பா பெரிய பாப்பா நடிகையைப் போல இருக்கிறீர்கள்’ என்பதுதான். உண்மையில், எனக்கு அந்த மாதிரியான கருத்துகள் சந்தோஷத்தை கொடுக்காது.

ஏனெனில் நான் அசலாகத் தோன்ற வேண்டும் என்று நினைப்பவள். ஆனால் இப்போது அதே கருத்தைச் சொன்னால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் என்னால் ஒருவரைச் சந்தோஷப்படுத்த முடிகிறது என்ற காரணம் தான்.

அவர் மறைந்த தருணத்திலிருந்து, என் நண்பர்களும், நெருங்கியவர்களும் அந்த சீரியல் குழுவை தொடர்பு கொள், அந்தக் கதாபாத்திரத்தின் தேர்வுக்கு சென்று வா, கண்டிப்பாக உன்னைத் தேர்வு செய்வார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்.

முதலில் அதைக் கேட்ட போது கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் இப்போது வரை அதே போன்ற குறுஞ்செய்திகள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன.

முல்லைக்கும் சித்துவுக்கும் மாற்றே கிடையாது. நாம் அவரை மிகவும் நேசித்துள்ளோம். இப்போது அந்தக் கதாபாத்திரத்தில் அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை தேர்வு செய்திருப்பார்கள். நாங்கள் சித்ராவுக்கு மரியாதையும், அன்பும் செலுத்தும் விதமாகத்தான் இந்த போட்டோ ஷூட்டை எடுத்தோம்.

எங்களைப் போன்றே சித்ராவை விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் புகைப்படங்களைப் பார்ப்பது மகிழ்ச்சியைத் தரும் என்று நம்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!