சபர்ணா முதல் சித்ரா வரை…. தொடரும் சின்னத்திரை கலைஞர்கள் தற்கொலை – அதிர்ச்சி பட்டியல்

சின்னத்திரையில் இதுவரை ஏராளமான நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், அதன் விவரத்தை இந்த தொகுப்பில் காணலாம்.

தமிழகத்தில் தொடர்ச்சியாக சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்துகொள்வது நடந்து வருகிறது. அந்த வரிசையில் சித்ராவின் மரணம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மட்டுமின்றி சின்னத்திரையில் பிரபலமாக நடித்துகொண்டிருந்த பல நடிகர், நடிகைகள் கடந்த சில ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டனர். அதன் விவரம் பின்வருமாறு,

நடிகர் சாருகேஷ்
சித்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த சாருகேஷ், பணப்பிரச்சினை காரணமாக, 2004ல் இரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

நடிகை வைஷ்ணவி
2006ல் சின்னத்திரை நடிகை வைஷ்ணவி, காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

முரளி மோகன்
வம்சம், தென்றல் உள்ளிட்ட சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த முரளி மோகன் 2014ம் ஆண்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சீரியல் வாய்ப்புக்கள் கிடைக்காததால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

பாலாஜி யாதவ்
கடந்த வருடம் அரசி உள்ளிட்ட சில தொடர்களை இயக்கிய பாலாஜி யாதவ் டிவி சீரியல் இயக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

ஷோபனா
சின்னத்திரை தொடர்களிலும் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்த ஷோபனா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நடிக்க முடியாமல் போனதால் மன இறுக்கத்திற்கு ஆளாகி தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.

நடிகை மயூரி
தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்துவந்த மயூரி 2005ஆம் ஆண்டு வாழ்க்கை மீது நம்பிக்கை இல்லாததால் சாவதாக எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பிரதியுஷா
இந்தி டப்பிங் சீரியலான மண் வாசனை சீரியலில் நடித்தவர் பிரதியுஷா. கடந்த ஏப்ரல் மாதம் மின் விசிறியில் துப்பட்டாவினால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சாய் பிரசாந்த்
பாரதி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சாய் பிரசாந்த். ஏராளமான சீரியல்களிலும் நடித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் அவர் இந்த முடிவை எடுத்தாக சொல்லப்படுகிறது.

சபர்ணா
சொந்த பந்தம் டிவி சீரியல் நடிகை சபர்ணா மதுராவயலில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரா
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான சித்ரா நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவ்வாறு தொடர்ந்து டிவி நடிகர்கள், நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் சின்னத்திரை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!