கமலுக்கு எழுதிய கதை – விரும்பிய ரஜினி, நடித்த அஜித்

நடிகர் கமலுக்கு எழுதிய கதையை ரஜினி விரும்பியதாகவும் இறுதியாக அந்த படத்தில் அஜித் நடித்ததாகவும் பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல், ஜோதிகா, ஜெயராம், தேவயானி உள்ளிட்டோர் நடித்த தெனாலி படம் ரிலீஸாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் தெனாலி பட அனுபவங்கள் பற்றி ரவிக்குமார் கூறியதாவது, கமல் சாரின் மருதநாயகம் படம் தள்ளிப்போனது. அதனால் அவர் என்னை தன் அலுவலகத்திற்கு வரச் சொல்லி, தான் ஓராண்டில் இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறினார். ஒரு படத்தை நானே இயக்கி நடிக்கிறேன், இன்னொரு படத்தை நீங்கள் இயக்குகிறீர்களா என்று கேட்டார். நானும் சரி என்றேன்.

சில நாட்கள் கழித்து மீண்டும் என்னை அலுவலகத்திற்கு வரவழைத்து, நான் இயக்கும் படத்தை நானே தயாரிக்கிறேன், நீங்கள் இயக்கும் படத்தை நீங்கள் தயாரிக்கிறீர்களா என்று கேட்டார். நான் தயாரிப்பாளர் ஆவது பற்றி யோசிக்கவே இல்லை. அதனால் அது குறித்து முடிவு எடுக்க அவகாசம் கேட்டேன்.

அதற்கு அவரோ, தைரியமா பண்ணுங்க சார். நான் கால்ஷீட் தருகிறேன். உங்க ஆபீஸுல வந்து படுத்துடுறேன். எப்போ வேணுமோ கூப்பிடுங்க என்றார். படையப்பா அப்பொழுது தான் ரிலீஸாகியிருந்தது. அது பெரிய ஹிட்டானது. ரஜினி சார் அடிக்கடி என் அலுவலகத்திற்கு வருவார். ஒரு நாள் அவரிடம் கமல் சார் சொன்னதை கூறினேன். அதற்கு ரஜினி சாரோ, நல்ல விஷயமாச்சே, போய் எவ்வளோனு கேளுங்க, கேட்டு அட்வான்ஸ் கொடுங்க என்றார்.

எல்லோரும் ஊக்குவித்ததால் நான் பணத்திற்கு ஏற்பாடு செய்தேன். படத்திற்கு தெனாலி என்கிற தலைப்பை பரிந்துரை செய்ததே ரஜினி சார் தான். கமல் சார் அவர் படத்தை 6 மாதத்தில் முடித்துவிடுவார் என்று நினைத்தேன், ஆனால் ஓராண்டு ஆகிவிட்டது, அது ஹேராம். அப்பொழுது ரஜினி சார் என்னிடம், நான் உங்கள இழுத்துவிட்டுட்டேனா என்று கேட்டார். இல்லை, இல்லை இந்த நேரத்தை பயன்படுத்தி நான் கமல் சாருக்காக சில கதைகள் எழுதுகிறேன் என்றேன்.

நான் எழுதிக் கொண்டிருந்த மற்றொரு கதையை கேட்ட ரஜினி சார், இந்த படத்தை கமல் பண்ணாவிட்டால் நான் நடிக்கிறேன் என்றார். அந்த படத்திற்கு மதனா என்று தலைப்பு வைத்தார் ரஜினி. அந்த படத்தை தான் நான் பின்னர் வரலாறு என்கிற பெயரில் அஜித்தை வைத்து எடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!