உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன்? – சீனு ராமசாமி விளக்கம்

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் என்பது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குனர் சீனு ராமசாமி இன்று காலை டுவிட்டரில் பதிவிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதுகுறித்து விளக்கம் அளிக்க சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இயக்குனர் சீனுராமசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: “விஜய் சேதுபதி நலன் கருதியே 800 படத்தில் நடிக்க வேண்டாம் என கூறினேன். அப்படி நடித்தால் தமிழர்களின் விரோதத்தை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுறுத்தினேன். எல்லோரும் சொன்னதுபோல் நானும் விஜய் சேதுபதியிடம் கோரிக்கை தான் வைத்தேன். அது தவறா?

விஜய் சேதுபதிக்கு எதிராக நான் செயல்பட்டதாகக் கூறி தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. விஜய்சேதுபதிக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சனை என சித்தரித்துள்ளனர். வாட்ஸ் அப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல் வந்துகொண்டு இருக்கின்றன. சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டுகின்றனர். விஜய் சேதுபதி ரசிகர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டார்கள். அவர்கள் மிரட்டவும் வாய்ப்பில்லை.

அவர்கள் எனது தம்பிகள். மிரட்டல்கள் தொடர்பாக, போலீசிடம் விரிவாக புகார் அளிக்க உள்ளேன். குடும்பத்துடன் வசிக்கும் எனக்கு இதுபோன்ற மிரட்டல்கள் தொடர்ந்து வருவதால், முதல்வர் கவனத்துக்கு உடனே கொண்டு செல்ல விரும்பினேன். யார் இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!