மீண்டும் இணையும் ‘ஜீன்ஸ்’ கூட்டணி?

ஷங்கர் இயக்கிய ‘ஜீன்ஸ்’ படத்தில் நடித்த பிரசாந்த் – ஐஸ்வர்யா ராய் கூட்டணி மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது.

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியில், தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார். இதில் ஆயுஷ்மான் குரானா வேடத்தில் பிரசாந்த் நடிக்கிறார். பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.

‘அந்தாதூன்’ படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்துக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது தபுவின் கதாபாத்திரம்தான். அதில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்து வந்தது.

இந்நிலையில், தபுவின் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நடிகை ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே ஷங்கர் இயக்கிய ‘ஜீன்ஸ்’ படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!