பிரபல மாஸ் ஹீரோவுக்கு வில்லனாகும் மாதவன்

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் மாதவன், அடுத்ததாக பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம்.

கதாநாயகர்கள் வில்லன் வேடங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளனர். ஏற்கனவே அர்ஜுன் கடல், இரும்புத்திரை படங்களில் வில்லனாக வந்தார். தனி ஒருவன் படத்தில் அரவிந்தசாமி வில்லன் வேடம் ஏற்றார். விஜய் சேதுபதி விக்ரம் வேதா, பேட்ட படங்களில் வில்லனாக வந்தார். தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திலும் குரூர வில்லனாக நடித்துள்ளார்.

இந்தநிலையில் மாதவனும் வில்லன் வேடங்களை ஏற்று நடிக்க தொடங்கி உள்ளார். இவர் அலைபாயுதே, மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், தம்பி, ரெண்டு, ஆர்யா, யாவரும் நலம், இறுதிச் சுற்று உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். அனுஷ்காவுடன் நடித்துள்ள சைலென்ஸ் படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் ‘புஷ்பா’ படத்தில் வில்லனாக நடிக்க மாதவனை அணுகி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஆரம்பத்தில் விஜய்சேதுபதியை வில்லன் வேடத்துக்கு முடிவு செய்தனர். ஆனால் அவரிடம் கால்ஷீட் இல்லாததால் மாதவனிடம் பேசி வருகிறார்கள். ஏற்கனவே நாகசைதன்யா படத்திலும் மாதவன் வில்லனாக நடித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!