பிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு தம்பியாக நடிக்கும் அதர்வா?

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தில் நடிகர் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது பிரபாஸ், ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார்.

அதிக பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் மிகப் பிரம்மாண்டமாக இப்படம் தயாராகவுள்ளது. மேலும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் இருக்கிறார்கள். ஜில் படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராதா கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் பிரபாசுக்கு தம்பியாக நடிகர் அதர்வா நடிக்க உள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அதர்வா ஏற்கனவே தெலுங்கில் கத்தலகொண்டா கணேஷ் என்கிற படத்தில் நடித்துள்ளார். இது தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!