பிகிலுக்கு அப்புறம் நாங்க எந்த படமும் பண்ணல – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா

2020-ம் ஆண்டு எந்த படமும் ஒப்பந்தம் செய்யவில்லை என பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித், இவர் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் நிற்கிறது. எஞ்சியுள்ள படப்பிடிப்பை அடுத்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அஜித்தின் 61 வது படம் குறித்து அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

அந்தவகையில் சமீபத்தில், பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம் அஜித்தின் 61-வது படத்தை தயாரிக்க உள்ளதாக செய்திகள் வலம்வந்தன.

இந்நிலையில், அதுகுறித்து ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: “சில போலி செய்திகள் பரவி வருகின்றன. அதனால் ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் இதனை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் 2020-ம் ஆண்டு எந்த படமும் ஒப்பந்தம் செய்யவில்லை. நாங்கள் யாரையும் சந்திக்கவில்லை. எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அடுத்த படத்திற்காக காத்திருக்கிறோம்”. எனக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!