சூர்யாவின் சூரரைப் போற்று…. எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டது தெரியுமா?

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தை பிரபல ஓ.டி.டி. நிறுவனம் எவ்வளவு தொகைக்கு வாங்கியது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேல் திரையரங்குகள் மூடி வைத்து இருப்பதால் தயாரிப்பாளர்கள் பார்வை ஓ.டி.டி. தளங்கள் பக்கம் திரும்பி உள்ளன. புதிய படங்களை திரையரங்குகளுக்கு பதிலாக நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் ரிலீஸ் செய்கிறார்கள். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி, வைபவ்வின் லாக்கப் போன்ற படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டன. அடுத்ததாக சூர்யாவின் சூரரைப் போற்று படமும் வருகிற அக்டோபர் 30-ந் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது .

ரூ.60 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தை அதே தொகைக்கு ஓ.டி.டி. தளத்துக்கு விற்று இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சாட்டிலைட் மற்றும் இந்தி டப்பிங் உரிமை ரூ.40 கோடிக்கு விலைபோனதாக சொல்லப்படுவதால், மொத்தம் ரூ.100 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

திரையரங்குகள் திறந்தாலும் உள்ளே சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஒவ்வொரு இருக்கைக்கும் நடுவில் ஒரு இருக்கையை காலியாக வைப்பது ஒரு வரிசைக்கு பின்னால் உள்ள வரிசையில் ஆட்களை நிரப்பாமல் விடுவது என்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.

இதனால் ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் திரையரங்கில் 400-க்கும் குறைவான டிக்கெட்டுகள் மட்டுமே விற்க முடியும் என்றும் பொதுமக்களும் அச்சமின்றி படம் பார்க்க வருவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனாலேயே பெரிய படங்களை ஓ.டி.டி தளத்தில் வெளியிட ஆலோசிக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!