மின் கட்டணம் ரூபாய் 2 லட்சம்…. அதிர்ச்சியடைந்த பாடகி ஆஷா போஸ்லே

பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகியான ஆஷாபோஸ்லே, தன்னுடைய வீட்டின் மின் கட்டணம் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேலாக வந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகி ஆஷாபோஸ்லே. இவரது வீடு மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள மலைவாசஸ்தலமான லோனேவாலாவில் அமைந்துள்ளது. இவரது வீட்டிற்கான ஜூன் மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 870 ஆக பில் கட்டணத்தை மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம் (மகாடிஸ்காம்) அனுப்பி உள்ளது. இதைப்பார்த்த ஆஷா போஸ்லே அதிர்ச்சியடைந்து, மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், என் வீட்டிற்கான ஏப்ரல் மாத மின்கட்டணம் ரூ.8,996.98 மற்றும் மே மாத மின் கட்டணம் ரூ.8,855.44 என வந்து கொண்டிருக்கும் போது ஜூன் மாதத்திற்கான கட்டணம் மட்டும் எவ்வாறு ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 870 ஆக அதிகரிக்கும் என கேட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள மகாடிஸ்காம் -ன் செய்தி தொடர்பாளர் ஆஷாவின் புகாரை அடுத்து புனே வட்டத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் ஆஷாவின் வீட்டிற்கு சென்று மின்மீட்டரை சரி பார்த்துள்ளார். அப்போது மின் கணக்கை பதிவு செய்த நபர் சரியாகத்தான் பதிவு செய்துள்ளதாக அந்த மூத்த அதிகாரி தெரிவித்து உள்ளதாக கூறினார்.

இதனிடையே பாடகி ஆஷா போஸ்லே உயர்த்தப்பட்ட மின் கட்டணங்கள் குறித்து புகார் அளிப்பது இது முதல் முறை அல்ல எனவும், கடந்த 2016 ம் ஆண்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போது புகார் கூறினார். அப்போதைய மாநில எரிசக்திதுறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே புகார் குறித்து ஆராயப்படும் என உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலும் பிரபல நடிகர் பிரசன்னா தனது தந்தையின் வீட்டிற்கு மின் கட்டணம் வழக்கத்தை விட அதிகமான கட்டணம் வந்துள்ளது என்று புகார் கூறினார். அதற்கு தமிழக மின்வாரியம் மற்றும் அத்துறை அமைச்சரும் விளக்கம் அளித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!