சுஷாந்த் சிங்கிற்கு இசையஞ்சலி செலுத்திய ஏ.ஆர்.ரகுமான்

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு இசையஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். இவர் கடந்த மாதம் 14-ம் தேதி மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது மறைவு பாலிவுட்டில் பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தின. சுஷாந்த் சிங்கின் தற்கொலை குறித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சுஷாந்த் சிங் கடைசியாக நடித்திருக்கும் படம் ‘தில் பேச்சாரா’. ஜான் க்ரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்” என்ற நாவலை மையமாகக் கொண்டு முகேஷ் சாப்ரா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் ஜூலை 24-ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் சுஷாந்த் சிங்குக்கு இணையம் வழியாக இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரகுமான், ஷ்ரேயா கோஷல், அர்ஜித் சிங், மோஹித் சவுகான், ஹிரிடே கட்டானி, சுனிதி சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் தில் பேச்சாரா படத்தில் இடம் பெற்ற பாடல்களை பாடினார்கள்.