அரைகுறை உடையில் நடிக்க மாட்டேன் – சாய்பல்லவி

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, அரைகுறை உடையில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி, பிரேமம் மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் அவரது நடன காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. படமும் வெற்றி பெற்றது. இதையடுத்து தியா படம் மூலம் தமிழுக்கு வந்தார். தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடித்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலில் சாய் பல்லவி ஆடிய நடனம் உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்றது. யூடியூப்பில் அதிகமானோர் பார்த்து சாதனையும் நிகழ்த்தியது. தொடர்ந்து சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படத்தில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை சாய்பல்லவி அளித்துள்ள பேட்டி வருமாறு: “சினிமா வாழ்க்கையில் நான் திருப்தியாக இருக்கிறேன். நடிகையாக பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியங்கள் எனக்கு இல்லை. எல்லோருடைய மனதிலும் இருக்கிற மாதிரி நல்ல கதாபாத்திரங்கள் செய்து பாராட்டை பெற வேண்டும் என்ற எண்ணம்தான் உள்ளது. எனது பலம் பலகீனம் என்ன என்பது எனக்கு தெரியும்.
வீட்டிலும் வெளியிலும் என்னை யாரும் ஒரு கதாநாயகியாக பார்க்கவில்லை. அவர்கள் வீட்டு பெண் மாதிரிதான் பார்க்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் பார்க்கிறவர்களுக்கு சவுகரியமாக இருக்கிறதா இல்லையா? நான் நடிக்கும் கதாபாத்திரத்தில் அவர்கள் மகள் இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா என்று ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து பார்த்து அதன்பிறகுதான் நடிக்கலாமா என்று முடிவு எடுப்பேன்.

அரைகுறை உடையில் என்னால் நடிக்க முடியாது. 20 வருடங்களுக்கு பிறகு எனது குழந்தைகள் நான் நடித்த படங்களை பார்த்தாலும் அதை பார்த்து சந்தோஷப்படுகிற மாதிரி இருக்க வேண்டும். எனது அப்பா, அம்மா, சிநேகிதிகள் எனது படத்தை பார்த்தாலும் பெருமைப்படவேண்டும். அப்படிப்பட்ட கதைகளில்தான் நடிக்க சம்மதிக்கிறேன்.” இவ்வாறு சாய்பல்லவி கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!