ஓ.டி.டி-யில் தடம்பதிக்க தயாராகும் கமல்

நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கமல்ஹாசன், அடுத்ததாக ஓ.டி.டி-யில் தடம்பதிக்க தயாராகி வருகிறாராம்.

கொரோனா ஊரடங்கில் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. இதனால் முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் டிஜிட்டல் தளத்துக்கு மாறுகிறார்கள். மணிரத்னம், சுஹாசினி, சித்தார்த், அரவிந்தசாமி, ஜெயேந்திரா, பிஜாய் நம்பியார் உள்பட 9 இயக்குனர்கள் இணைந்து புதிய வெப் தொடரை எடுக்க உள்ளதாகவும் அவற்றில் சூர்யா, விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட 9 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனும் ஓ.டி.டி. தளத்துக்கான திரைப்படங்களையும் வெப் தொடர்களையும் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான கதைகள் கேட்டு வருகிறார். நல்ல கதை அமைந்தால் தானே நடித்து இயக்கி ஓ.டி.டி. தளத்தில் வெளியிட முடிவு செய்து இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பே தனது விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்சில் வெளியிட ஆயத்தமாகி எதிர்ப்பினால் கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன்-2 பட வேலைகள் கொரோனாவால் முடங்கி உள்ளன. இந்த படத்தை முடித்து விட்டு முழுவீச்சில் ஓ.டி.டி. தளத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!